60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து, சாக்கு மூட்டைகளில் கட்டி கொடூரமாக அடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடகாவில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து, சாக்கு மூட்டைகளில் கட்டி கொடூரமாக அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா, சக்லேஷ்பூரில் 60 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொன்று கோணிப்பைகளில் கட்டி பேகூர் சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.
சாலையில் சென்றவர்கள் இந்த சாக்கு மூட்டையை பார்த்து சந்தேகமடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.
சாக்கு மூட்டைகளை பிரித்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சாக்கு மூட்டைகளை திறந்து வெளியே கொட்டியபோது குரங்குகள் கொத்து கொத்தாக மயக்க நிலையில் இறந்திருந்தது.
அவற்றில் 14 குரங்குகள் உயிருடன் மயக்க நிலையில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே, அந்த 14 குரங்குகளையும் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எஞ்சிய 46 குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இது குறித்து கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது சமூகவலைத்தளங்களில் இதுகுறித்த படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.