சமுத்ரயான்; 20,000 அடி ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்ப திட்டம் - மாஸ் காட்டும் இந்தியா!
தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம் (என்ஐஓடி) ‘சமுத்ரயான்’ திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
சமுத்ரயான்
நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்து சாதனை படைத்தது இந்தியா (இஸ்ரோ). அதன் பிறகு சூரியனில் உள்ள காந்தப்புயல்கள் பற்றி ஆய்வு செய்ய ஆதித்யா L1 என்ற விண்கலத்தை வடிவமைத்து, விண்ணில் ஏவி, அதிலும் வெற்றி கண்டது இந்தியா.
இந்நிலையில் தற்போது ஆழ்கடல் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய கடல் தொழில்நுட்பக் கழகம் (என்ஐஓடி) ‘சமுத்ரயான்’ திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நீர்மூழ்கி கலனுக்கு ‘மத்ஸ்யா 6000’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மத்ஸ்யா என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு மீன் எனப் பொருள்.
விஷ்ணுவின் 10 அவதாரங்களில் முதலாவது அவதாரம் மச்ச அவதாரம் ஆகும். இதன் அடிப்படையில் இதற்கு மத்ஸ்யா என பெயரிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நீர்மூழ்கி கலன் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இதில் 3 மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 6000 மீட்டர் அதாவது 20 ஆயிரம் ஆடி ஆழத்திற்கு சென்று ஆழ்கடல், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடலில் கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ், ஹைட்ரோதெர்மல் சல்பைடு மற்றும் காஸ் ஹைட்ரேட்ஸ் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் வங்கக் கடலின் ஆழ்பகுதியில் இருக்கிறதா என ஆய்வு செய்ய உள்ளது.
இந்தியா
இதன் மூலம் அடுத்த 5 வருடங்களில் பல ஆழ்கடல் சோதனைகளை இந்திய அரசு நடத்த உள்ளது. இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறியதாவது "மத்ஸ்யா நீர்மூழ்கி வாகனத்தின் முதல்கட்ட சோதனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும்.
சென்னை கடற்கரைக்கு அருகே வங்கக் கடலுக்குள் 500 மீட்டர் ஆழம் வரை இந்த சோதனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், மத்ஸ்யா திட்டம் 2026-ம் ஆண்டில் இறுதிகட்டத்தை எட்டும். இந்த நீர்மூழ்கி வாகனத்தை 3 பேர் பயணிக்க வசதியாக 2.1 மீட்டர் விட்டம் கொண்டதாக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்' என்று என்ஐஓடி இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதர்கள் பயணிக்கும் நீர்மூழ்கி வாகனத்தை தயாரித்துள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next is "Samudrayaan"
— Kiren Rijiju (@KirenRijiju) September 11, 2023
This is 'MATSYA 6000' submersible under construction at National Institute of Ocean Technology at Chennai. India’s first manned Deep Ocean Mission ‘Samudrayaan’ plans to send 3 humans in 6-km ocean depth in a submersible, to study the deep sea resources and… pic.twitter.com/aHuR56esi7