தயக்கம் வேண்டாம்.. நானும் இப்படித்தான் மீண்டு வந்தேன்'' - மனம் திறந்த சமந்தா
மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்றும், சொந்த வாழ்க்கையில் தான் மீண்டு வந்தது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை சமந்தா.
மன ஆரோக்கியம் தொடர்பான தனியார் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டார் சமந்தா. அப்போது பேசிய அவர், மன ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், மன நலம் சார்ந்த பிரச்னையில் இருக்கும் போது மீண்டு வருவதற்கான உதவியை பெறுவதில் தடையோ, தயக்கமோ இருக்கக் கூடாது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை மன நல பிரச்னையில் இருந்து மீண்டு வர நண்பர்களும், மருத்துவர்களுமே உதவி செய்தனர்.
மனம் நலம் சார்ந்த பிரச்னையில் மருத்துவரை அணுகுவது மிகவும் சாதாரணமானது. உடல் நிலை பிரச்னை என்றால் எப்படி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்கிறோமோ, அப்படித்தான் மன நல பிரச்னைக்கும். நம் மனம் காயமடைந்தால் மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “என் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் நான் வெற்றி பெறுகிறேன் என்றால், அது நான் வலுவாக இருந்ததால் மட்டுமே அல்ல. என்னைச் சுற்றியிருந்த பலர் நான் வலுவாக இருக்க உதவியதால் தான். பலர் நான் மீண்டு வர எனக்கு உதவியாக இருந்தனர்” என்றார்.