தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத்தவர்களை கட்டுப்படுத்துங்கள் - சட்டக்கல்லுாரி மாணவர்களின் பட்டினி போராட்டத்திற்கு சீமான் ஆதரவு
வடமாநிலத்தவர்களின் குவிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் உள்நுழைவு அனுமதி சீட்டு (Inner line Permit) முறையை அமல்படுத்த சேலம் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு அளித்துள்ளார்.
சட்டக்கல்லுாரி மாணவர்கள் போராட்டம்
இந்தி முதலாளிகள்- தொழிலாளிகளின் ஆதிக்கத்தால் தமிழ்நாட்டின் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், வணிகர்களின் உரிமையும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை கண்டித்தும் தமிழ்நாடு அரசு இதற்கு என தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் சேலம் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்கள் போரட்டத்தை துவங்கி உள்ளனர்.
1. நாகலாந்து, மிசோரம், அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருக்கும் உள்நுழைவு அனுமதி சீட்டு முறையை போல தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்.
2. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு, தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என அனைத்திலும் தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு 90 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
3. தமிழ்நாட்டில், இந்திய அரசின் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் இந்திய அளவில் தகுதி மதிப்பெண் வாங்கிய தமிழ்நாட்டின் மாணவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும்.
4. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் வெளியார்களும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கலாம் என்ற விதியை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்று 100 விழுக்காடு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு பணியினை உறுதி செய்திட வேண்டும்.
மாணவர்களுக்கு சீமான் ஆதரவு
5. தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் அடங்கிய தொகுப்பினை கொண்டு இந்திய அரசின் e-SHRAM பதிவு நடைமுறைகள் போன்று தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு ஆணையத்தை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கு தேவையான பணியாளர்கள், அவர்களின் கூலி, பணி நேரம், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் முதலியனவற்றை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.
என 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை சேலம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் துவங்கியுள்ளனர்.
இந்த சட்டக்கல்லுாரி மாணவர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.