ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்கும் சச்சின் டெண்டுல்கரின் மகன் : கிளம்பும் எதிர்ப்பும் ஆதரவும்

ranchi trophy sachin son arjun tendulkar mumbai team
By Swetha Subash Dec 30, 2021 06:44 AM GMT
Report

பி.சி.சி.ஐ. நடத்தும் பிரதான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் 38 அணிகள் பங்கேற்கிறது. இதில் மும்பை அணி சி பிரிவில் மகாராஷ்டிரா, சர்வீஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக பிரித்வி ஷா முதல் முறையாக களமிறங்குகிறார்.

ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் முதல் முறையாக சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

22 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் தந்தை போல் இல்லாமல், நல்ல உயரமாகவும், இடதுகை பேட்ஸ்மேன், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என ஆல் ரவுண்டராக விளங்குகிறார்.

ரஞ்சி கோப்பையில் இது முதல் முறை என்றாலும், சையது முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடரில் மும்பை அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கர் ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஹரியானா அணிக்காக களமிறங்கிய அவர் மூன்று ஓவர் வீசி 1 விக்கெட்டுகளை எடுத்து 34 ரன்கள் விட்டு கொடுத்தார்.

புதுச்சேரி அணிக்கு எதிரான 2வது ஆட்டத்தில் 4 ஓவர் வீசி ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றி 33 ரன்களை விட்டு கொடுத்தார்.

கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் அர்ஜூன் டெண்டுல்கரை எந்த அணியும் முதலில் தேர்வு செய்யவில்லை. பின்னர் ஏலம் முடியும் தருவாயில் மும்பை அணி அவரை 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.

ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சச்சினின் மகன் என்பதால் தான் இந்த ரஞ்சி வாய்ப்பு என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அர்ஜூன் சிறப்பாக விளையாடுகிறார் என்பதால் தான் அணியில் தேர்வாகி உள்ளதாக மும்பை அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சலில் அங்கோலா தெரிவித்துள்ளார்.