WTC Final கோப்பை - நியூசிலாந்துக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம்: அடித்து சொல்லும் சச்சின்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதி வரை இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக ஜூன் 3ஆம் தேதி, இந்திய அணி குழு இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது. சில நாட்கள் குவாரண்டையில் இருந்த இவர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 1-0 எனத் தொடரைக் கைப்பற்றி வெற்றியின் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டிகொடுத்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கோப்பை வெல்ல நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்தார்.
இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள் இரு குழுக்களாகப் பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராகப் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட முடியவில்லை என ஐசிசியின் தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் ஒரு காரணியாக காலநிலையும் இருக்கிறது. நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றதால், அவர்கள் காலநிலையை கணித்திருப்பார்கள் என்பதுதான் சச்சின் கருத்தாக உள்ளது.
மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிப்பதற்கு மூன்று இறுதிப் போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் கூறினார். ஒரே ஒரு இறுதிப் போட்டி மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கக் கூடாது. குறைந்தது மூன்று போட்டிகளையாவது நடத்தினால்தான் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.