விஜய் ஒரு கார் பைத்தியம் - எஸ்.ஏ.சி., சொன்ன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் விஜய் குறித்து இயக்குநரும், அவரது தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே,, இயக்குநர் செல்வராகவன் உட்பல பலரும் நடித்துள்ள படம் “பீஸ்ட்”. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதனிடையே இயக்குநரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சில தினங்களுக்கு முன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் விஜய் தனது பேட்டிகளில் தான் மிகவும் எளிமையானவர் என கூறுகிறார். ஆனால் விலை உயர்ந்த காரான ரோல்ஸ் ராய்ஸ் வைத்துள்ளார். இது முரண்பாடாக உள்ளதே? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு எஸ்.ஏ.சி., விஜய் படிக்கும் காலத்தில் இருந்தே கார் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தவர் என்றும், அப்போதைய தி இந்து பத்திரிக்கையில் வரும் கார் அறிமுக போஸ்டரை எடுத்துக் கொண்டு தன்னிடம் இந்த கார் வேண்டும் என கேட்பவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விஜய்க்கு கார் வாங்கி தானே ஓட்டிச் செல்வது பிடிக்கும் என்றும், சொல்லப்போனால் அவர் ஒரு கார் பைத்தியம் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.