உடலில் 19 காயங்கள்: அடித்துக் கொலை செய்யப்பட்ட சபரி வர்மன்
நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சபரிவர்மன்
கன்னியாகுமரியின் தென்தாமரைக்குளம் ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன்(வயது 34).
வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்திருந்த சபரிவர்மன் குட்கா விற்பனை செய்வதாக கூறி கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார், இந்நிலையில் 12ம் தேதி சிறைவார்டன் உள்ளிட்டோர் அவரை தாக்கியதில் 13ம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இறப்பில் சந்தேகம்
சபரிவர்மன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இச்சம்பவத்தில் சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார், தலைமை சிறை காவலர் திருமலை நம்பி கைது செய்யப்பட்டுள்ளனர், 3 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதி தலைமையில் விசாரணை
இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டது.
மேலும் சிறப்பு மருத்துவ குழுவினர் உடற்கூறு நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது உடலில் தலை முதல் கால் வரை 19 காயங்கள் இருந்துள்ளது, கையில் உள்ளங்கை திசுக்களில் ரத்தக்கசிவு பதிவாகியுள்ளது.
பல இடங்களில் சிராய்ப்பும், அனைத்து சிவப்பு நிறத்தில் காணப்பட்டதாகவும் மருத்துக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை
அறிக்கையின்படி, சபரிவர்மனின் வலது முன்னங்கை மற்றும் வலது காலின் கீழ்ப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளது.
வலது கையில் பலத்த ரத்தக்கட்டு இருப்பதுடன், அங்கு எலும்பு முறிந்திருப்பதும், தோலுக்கு அடியில் பல இடங்களில் ரத்தம் உறைந்து போயிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மண்டை ஓட்டைப் பிரித்து ஆய்வு செய்தபோது, சபரிவர்மனின் உச்சந்தலையில் தடிமனான ரத்தக்கட்டும், பிடரி பகுதியில் ஆழமான காயமும் இருப்பது தெரியவந்துள்ளது.