இந்தியாவை பஞ்சு பஞ்சாய் பறக்க விட்ட தென்னாப்பிரிக்கா ... முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
அதன்படி முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரில் இன்று நடைபெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்காத காரணத்தால் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணியில் வெண் டர் டுசேன் சிறப்பாக விளையாடி 129* ரன்கள் குவித்தார்.
அவருக்கு பக்கபலமாக ஆடிய கேப்டன் பவுமாவும் சதமடித்தார். இதனால் 50 ஓவர்கள்முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவான்(79 ரன்கள்), விராட் கோலி (51 ரன்கள்), ஷர்துல் தாகூர் (50 ரன்கள்) மட்டுமே சிறப்பாக விளையாடினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.