பாடகி எஸ். ஜானகி மறைவு.. முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல்
பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூலை 11ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல், திரையுலகம், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் இரங்கல்
இந்த நிலையில், முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
"இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.
தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்திய அபாரத் திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
எஸ். ஜானகி அவர்களின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 11, 2026
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை…