ஒரே தொடரில் 4 சதம்: வரலாறு படைத்தார் ருத்துராஜ் கெய்க்வாட் - குவியும் பாராட்டு
விஜய் ஹசாரே தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் நான்கு சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. இதன் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் நேற்று நடந்த போட்டியில் சண்டிகர் அணியும், மகாராஷ்டிரா அணியும் மோதின. ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் அணியில் மனன் வோஹ்ரா 141 ரன்களும், அர்ஸ்லன் கான் 87 ரன்களும், அன்கித் கவுசிக் 56 ரன்களும் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சண்டிகர் அணி 309 ரன்கள் குவித்தது.மகாராஷ்டிரா அணி சார்பில் அதிகபட்சமாக பிசி சேதே தாதே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு அந்த அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ருத்துராஜ் கெய்க்வாட் 132 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 168 ரன்கள் குவித்தார்.
இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டியில் சதம் அடித்திருந்த ருத்துராஜ் கெய்க்வாட், நேற்றைய போட்டியிலும் சதம் அடித்திருப்பதன் மூலம், விஜய் ஹசாரே தொடரில் (ஒரே தொடரில்) 4 சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் வெற்றி இலக்கை 48.5 வது ஓவரிலேயே இலக்கை எட்டிய மகாராஷ்டிரா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.