ஆட்டத்தின் திசையை ருத்ராஜ் மாத்திட்டார் - குமுறும் பொல்லார்ட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் மொத்த ஆட்டத்தின் போக்கையும் மாற்றிவிட்டார் என்று மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் தெரிவித்தார்.
கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று முதல் தொடங்கியுள்ளன.
துபாயில் நேற்றிரவு நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து மிரட்டினார்.
இதையடுத்து, களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது.
போட்டிக்குப் பிறகு மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பேசும்போது, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் சிறப்பாக ஆடினார்.
டி20 கிரிக்கெட் டை பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேன் தொடக்கத்தில் இருந்து கடைசிவரை நின்றால், அவர் உங்களை காயப்படுத்தி விடுவார். ருதுராஜ் மொத்தத்தையும் மாற்றிவிட்டார்.
நாங்கள் ஆட்டத்தை சரியாக முடிக்கவில்லை. எங்கள் பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலேயே சில விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
நாங்கள் அதை கடைசிவரை கொண்டு போகத் தவறிவிட்டோம். சிஎஸ்கே அணி, 150 ரன் களுக்கு மேல் பெற்றிருந்தாலும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றிருக்கலாம்.
சூழலைக் கருத்தில் கொண்டு சவுரப் திவாரி நன்றாக பேட் செய்தார்' என்று தெரிவித்துள்ளார்.