தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சென்னை அணி வீரர் - இந்திய அணியில் என்ன தான் பிரச்சனை?
இந்திய அணியில் தொடர்ந்து ருத்துராஜ் கெய்க்வாட் புறக்கணிக்கப்படுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வியடைந்து 2-0 என தொடரை இழந்துள்ள இந்திய அணி இந்த போட்டியிலாவது மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், பிரஷித் கிருஷ்ணா மற்றும் தீபக் சஹார் ஆகியோருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பளித்துள்ள கேப்டன் கே.எல்.ராகுல் சென்னை அணியில் அதிரடியாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட்டை மட்டும் புறக்கணித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ருதுராஜ் கெயிக்வாட் புறக்கணிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்திய அணிக்குள் பிரச்சினை நிலவுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இந்திய அணியில் தற்போது கேப்டன் ரோகித் சர்மா, துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் முதன்மை தேர்வாக உள்ளனர். ஷிகர் தவான் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருப்பதால், அவருக்கு இனி வரும் போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்டால் மட்டுமே ருத்துராஜூக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.