‘தோனியின் அனைத்து குணங்களும் இந்த பையன்கிட்ட இருக்கு; சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் இவன் தான்’ - சேவாக்
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய 2022 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்றுள்ளது.
லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளதால் எஞ்சியுள்ள 2 இடங்களுக்கு 6 அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது. முன்னாள் சாம்பியன்களான சென்னை, மும்பை அணிகள் முதல் அணிகளாக தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
இதில் சென்னை அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் மும்பையுடன் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது.
முன்னதாக இத்தனை ஆண்டுகாலம் சென்னை அணியை வழிநடத்தி வந்த தல தோனி இந்த சீசனில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ரவீந்திர ஜடேஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். 40 வயதான தோனி அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறி தான்.
இந்நிலையில், அடுத்த சீசனில் தோனி விளையாடவில்லை என்றால் ஜடேஜாவை தான் கேப்டனாக நியமிப்பார். ஆனால் அப்பொழுது அவருடன் களத்தில் இருந்து உதவ தோனி இருக்க மாட்டார். இந்த காரணத்தினால் தான் ஜடேஜாவை கேப்டனாக தயார் படுத்த தோனி நினைத்தார்.
இதன் மூலம் நெருக்கடியான சமயத்தில் அணியை எப்படி வழிநடத்த வேண்டும், ஃபீல்டர்களை எப்படி நிறுத்த வேண்டும் போன்ற யுத்திகளை ஜடேஜாவுக்கு நடப்பு சீசனிலேயே களத்தில் தோனி கற்றுக்கொடுத்துவிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் ஜடேஜாவால் ஆட்டத்தில் தன்னுடைய நிலையை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
கேப்டன்சியில் ஜடேஜா தொடர்ந்து சொதப்பி வந்ததால் ஆடிய அனேக போட்டிகளில் சென்னை அணி தோல்வியையே தழுவியது. இதனை தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி மறுபடியும் தோனியிடமே பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார்.
இதனிடையே சென்னை அணி அடுத்த ஆண்டு பலமாக திரும்ப வேண்டும் என்பதால் அணியை கட்டமைக்கும் பொறுப்பு தோனியின் கைகளில் தான் உள்ளது என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், “இன்னும் 3, 4 சீசன்களில் விளையாடினால், தோனிக்கு பிறகு சிஎஸ்கே-வின் நீண்ட கால கேப்டனாக வரக்கூடிய வாய்ப்பு ருதுராஜ்-க்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். அதிர்ஷ்டம் ஒன்றைத் தவிர, தோனியின் அனைத்து குணங்களும் ருதுராஜிடம் உள்ளன.” என தெரிவித்துள்ளார்.