ஆலமரத்தின் அடியில் நிர்வாணமாக நின்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் - நடந்தது என்ன?
700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தில் நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய இன்ஸ்டாகிராம் பிரபலம் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான அலினா பஸ்லீவா தனது கணவருடன் இந்தோனேசிய தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள பாலி தீவுக்கு தனது கணவருடன் சென்ற அவர் இயற்கை எழில் கொஞ்சம் மலைகள், மரங்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு களித்து போட்டோ எடுத்துள்ளார்.
அப்போது அங்குள்ள தெபனான் மாவட்டத்தில் இருக்கும் 700 ஆண்டு பழமையான ஆலமரத்தை அலினா பார்த்துள்ளார் . இந்த மரம் அவருக்கு மிகவும் பிடித்துபோனதால், அந்த மரத்தை தழுவிக்கொண்டு நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதை அவர் இன்ஸ்ட்ராகிராமில் அப்லோட் செய்த நிலையில் அது வைரலானது.
இதனைப் பார்த்த பாலியைச் சேர்ந்த மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். ஏனென்றால் பாலியைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கை படி மரங்கள், மலைகள் ஆகிய இயற்கையை கடவுளாக கருதுகிறார்கள். எனவே அலினாவின் இந்த செயல் உள்ளூர் வாசிகளை காயப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அலினாவும் அவரது கணவரையும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும், உள்ளூர் விதிகளை மீறியதாக கூறி பாலி குடியேற்ற அதிகாரி ஜமாருலி மணிஹுருக் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.
மேலும் இருவருக்கும் இந்தோனேசியாவில் நுழைய ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் அந்த இடத்தை தூய்மை செய்யும் பணியில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது செயலுக்கு அலினா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பெரிய தவறு இழைத்துவிட்டதாகவும், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புனிதமான நம்பிக்கை இருக்கும், தனக்கு அது தெரியாத காரணத்தால் இந்த தவறு நடைபெற்றது என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் நம்பிக்கையை மதிப்பது மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக பாலியில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கடந்தாண்டு வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.