“எங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதத்தை நாங்கள் பயன்படுத்துவோம்” - ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர்
கடந்த மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா தொடர்ந்து 28-வது நாளாக அந்நாட்டு மீது கோர தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
உக்ரைனும் தனியாளாக ரஷ்ய படைகளை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்வதாலும் இதனால் அப்பாவி பொதுமக்கள்: மற்றும் குழந்தைகள் உயிரிழப்பதாலும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தனர்.
ஆனால் அவை யாவும் தோல்வியிலேயே முடிந்தன. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கியும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அப்போது, அவரிடம் அணு ஆயுதம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,
“உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது. அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் அனைத்தையும் வாசியுங்கள்.
ரஷ்யா என்ற நாடு இந்த உலகத்தில் இருக்குமா? இருக்காதா? என்ற உச்சபட்ச அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அணு ஆயுதத்தை நாங்கள் பயன்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார் டிமிட்ரி.