மிரட்டும் ரஷ்ய உக்ரைன் யுத்தம் 18 - 60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை : உக்ரைன் உள்துறை அமைச்சகம் உத்தரவு
உக்ரைனைச் சேர்ந்த 18 - 60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா. உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. கடந்த பல வாரங்களாக போர் எப்போது மூளுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் நிலவி வந்தது.
இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் நேற்று அதிகாலை அதிரடியாக உத்தரவிட்டார். புடின் தொலைக்காட்சியில் பேசிய சிறிது நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கின.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டோனஸ்க் , மைக்கோல், மரியூபோல் மற்றும் கிழக்கு உக்ரைனின் நகரங்களில் ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்ததுமும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது
இந்நிலையில் ரஷ்யாவுடனான முதல்நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொலியின் மூலமாக உரையாற்றிய அவர், “ரஷியப் படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் நேற்று உயிரிழந்தனர்.
மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர். இன்று நாம் 137 மாவீரர்களை இழந்துள்ளோம். அதில் எங்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் அடங்குவர்” என்று அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் நாட்டிலிருந்து 18-60 வயதுடையோர் வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கீவ் நகரில் உள்ள மக்களுக்கு 10,000 தானியங்கி துப்பாக்கிகள் விநியோகித்துள்ளதாகவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனைச் சேர்ந்த 18 - 60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.