போரை நிறுத்த ரஷ்யா அதிபருக்கு நான் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? - உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி
ரஷ்யா அதிபர் புதினுக்கு போரை நிறுத்துமாறு நான் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? என உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருவதால் அங்கு சிக்கி இருக்க கூடிய இந்தியர்களை ஆப்ரேசன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு மீட்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
உக்ரைன் நாட்டின் தலைநகரான கார்கிவ் பகுதியில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய துாதரகம் அறிவுறுத்தியது.
நடந்து வந்தாவது அண்டை நாட்டு எல்லைகளுக்கு வந்து விடுங்கள் என இந்திய துாதரகம் அறிவித்தது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ன செய்து கொண்டிருக்கிறார்? என கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ‘‘சமூக வலைத்தளங்களில் நான் சில வீடியோக்கள் பார்த்தேன்.
இதில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்ன செய்து கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும்படி நான் புதினுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா?’’ என்றார்.
மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களுக்காக நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம். மத்திய அரசு மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றும் என்ன செய்யலாம் என்பது குறித்து அட்டார்னி ஜெனரலிடம் கேட்போம்’’ என்றார்.