உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின்
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புதின் நேற்று அதிகாலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பை புதின் தொலைக்காட்சியில் உரையாடியபோது தெரிவித்தார். அவர் பேசிய சிறிது நேரத்திலேயே உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கின.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டோனஸ்க் , மைக்கோல், மரியூபோல் மற்றும் கிழக்கு உக்ரைனின் நகரங்களில் ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்து மும்முனை தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனகங்களை தெரிவித்திருந்தனர்.
மேலும் உடனடியாக தாக்குதலை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
எதையும் பொருட்படுத்தாத ரஷ்யா இரண்டாவது நாளான இன்றும் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுடனான முதல்நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
“ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ரஷ்யா என்னை நம்பர் ஒன் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனது குடும்பம்தான் அவர்களின் இரண்டாவது இலக்கு. உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர்.
கீவ் நகருக்குள் நாசவேலைகளில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனால், நகர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஊரடங்கு விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். உக்ரைன் அரசு பணியாற்ற தேவையான அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களுடன் ஒன்றாக நான் அரசு இல்லத்தில் தங்கியுள்ளேன்.” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் பேசினார்.
மேலும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்தார்.
ரஷ்ய படைகளிடமிருந்து இருந்து நாட்டைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அமைதியை தான் விரும்புகிறது என உக்ரைன் அதிபர் தொடக்கம் முதலே கூறிவரும் நிலையில், உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்-இல் உக்ரைன் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அதிபர் புதின் கூறியுள்ளார்.