தன் குடும்பத்தை பற்றிய எந்த விவரங்களும் வெளியில் கசியாதவாறு பார்த்துக்கொள்ளும் அதிபர் புதின்
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்து, மக்கள் உயிர் பிழைக்க அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புதின் பற்றியும், போருக்கான காரணங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால் அதில் எந்த அளவிற்கு உண்மை தன்மை உள்ளது என்பதை உலக மக்கள் பொருத்திருந்து தான் பார்க்கவேண்டி இருக்கிறது.
குறிப்பாக ரஷ்ய அரசியல் தலைவர்களின் குடும்ப விவரங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியில் கசிவதில்லை.
அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் பற்றியும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்தும் எந்த தகவலும் இதுவரை பெரிதளவில் வெளியில் வந்ததில்லை.
ஒரு விமான பணி பெண்ணான ரஷ்ய அதிபர் புதினின் மனைவி லியுட்மிலா ஸ்க்ரெப்னோவா கடந்த 1983-ம் ஆண்டு ஜுலை மாதம் புதினை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு மரியா, கேத்தரீனா என 2 மகள்கள் உள்ளனர். ஆனால் தனக்கு மகள்கள் இருக்கின்றனர் என எந்த இடத்திலும் புதின் வெளிப்படுத்தியதில்லை.
மூத்த மகள் மரியா வொரேன்ட்சோவா உயிரியல் படித்துவிட்டு மருத்துவதுறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் திருமணம் ஆகி கணவருடன் மாஸ்கோவில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் நடன கலைஞராக உள்ளார்.
புதின் ரஷ்ய அதிபராக இருந்தாலும் முக்கிய அரசு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மனைவியை அழைத்து வருவார். அது தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் அவர் மனைவியுடன் பங்கேற்பதில்லை.
இந்த நிலையில், 2014-ல் ஒரு பாலே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, புதின் மற்றும் லியுட்மிலா தம்பதி ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் தங்கள் விவாகரத்தை அறிவித்தனர்.
"இது ஒரு கூட்டு முடிவு, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துகொள்வதே அரிதாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது" என புதின், மனைவி லியுட்மிலா உடனான விவாகரத்து குறித்து கூறியிருந்தார்.
ஆனால் புதினின் விவாகரத்துக்கு பின்னணியில் அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு ஒலிம்பிக் வீராங்கனையை காதலித்து வந்ததாகவும் இந்த தம்பதிக்கு மூன்றாவதாக ஒரு மகள் இருப்பதாகவும்,
அவரை புதின் ரகசியமாக வளர்த்து வருவதாகவும் தகவல் வெளியானது.
எனினும் இந்த தகவல்களை புதின் மறுத்தார் என்பதும் அதன் பிறகு இந்த விவகாரம் பெரிதளவில் பேசப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.