அணு ஆயுத போர் பயிற்சியில் ஈடுப்பட்ட ரஷ்ய படைகள் : பீதியில் உலக நாடுகள்
கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுதம் மற்றும் நிதியுதவி உள்ளிட்ட ஆதரவும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், போலந்து மற்றும் லித்துவேனியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள பால்டிக் கடல் பகுதியில், அணு ஆற்றலை கொண்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஸ்கேண்டர் வகை ஏவுகணைகளை அனுப்பி ரஷ்ய வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட்டுள்ளனர்.
இந்த பயிற்சிக்காக விமான தளங்கள், பாதுகாக்கப்பட்ட உட்கட்டமைப்புகள், ராணுவ சாதனம் மற்றும் முகாம்கள் ஆகியவற்றை போலியாக உருவாக்கி, அவற்றை இலக்குகளாக கொண்டு ஒன்று முதல் பல்வேறு முறை மின்னணு முறையிலான தாக்குதல்களை தொடுத்து பயிற்சி மேற்கொண்டனர்.
அதேபோல் கதிரியக்கம் மற்றும் ரசாயன வீச்சு ஆகிய தாக்குதல்களுக்கும் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர்.
இதனால், ரஷ்யா தனது போரின் ஒரு பகுதியாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியம் பற்றி உலக நாடுகளிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.