ரஷ்யாவில் சக்தி வாய்ந்த ஏவுகணை வெற்றி - இனி... எதிரிகள் யோசித்துவிட்டு மோதுங்கள்... - புதின் எச்சரிக்கை
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டன. அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. உக்ரைன் தலைநகர் கீவியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ள நிலையில், அங்கிருந்து சுமார் 900 உடல்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடமேற்கு ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியில், `சர்மாட்' எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக செய்திருக்கிறது. இதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
சர்மாட் ஏவுகணை சோதனையின் வெற்றி குறித்து ரஷ்ய அதிபர் புதின் பேசுகையில், மிகத் தனித்துவமான இந்த ஆயுதம் ரஷ்யப் படைகளின் போர் திறனை இன்னும் அதிகப்படுத்தும். மேலும் வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து ரஷ்யாவின் பாதுகாப்பையும் இது உறுதி செய்யும். அதுமட்டுமில்லாமல் பூமியில் உள்ள எந்த இலக்குகளையும் தாக்கக்கூடியது இந்த சர்மாட். இனி ரஷ்யாவை எச்சரிக்க முயற்சிப்பவர்களை இது இரண்டு முறை சிந்திக்கவைக்கும் என்று பேசியுள்ளார்.