“எங்கள் நாட்டை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரஷ்யா கடத்தி சென்றுள்ளது” - உக்ரைன் பரபரப்பு தகவல்
உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரஷ்யா கடத்தி சென்றுள்ளதாக உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா தொடர்ந்து 27-வது நாளாக அந்நாட்டு மீது கோர தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
உக்ரைனும் தனியாளாக ரஷ்ய படைகளை எதிர்த்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்வதாலும் இதனால் அப்பாவி பொதுமக்கள்: மற்றும் குழந்தைகள் உயிரிழப்பதாலும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தனர்.
ஆனால் அவை யாவும் தோல்வியிலேயே முடிந்தன.
இந்நிலையில், பொது மக்களை பிணயக்கைதிகளாக ரஷ்ய படைகள் பிடித்து வைத்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டி வரும் நிலையில், உக்ரைனிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ரஷ்யா கடத்தி சென்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகள் ரஷியாவுக்கு சட்ட விரோதமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டான்பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.