சர்வதேச விண்வெளி நிலையம் : அமெரிக்காவுடனான உறவு துண்டிப்பு - ரஷ்யா அதிரடி அறிவிப்பு
கடந்த 24-ந் தேதி ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தொடங்கி இன்று வரையும் இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது.
உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரஷ்யா உக்ரைன் நாட்டு மீது போர் தொடுத்துள்ளதை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. எதற்கும் ரஷ்யா செவி சாய்க்காத நிலையில் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை உலக நாடுகள் விதித்து வருகிறது.
இதனிடையே, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.பொதுச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
ரஷ்யாவும், உக்ரைனும் அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
அணு ஆயுத போர் என்பது எங்கள் கையில் இல்லை, நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் தான் அணு ஆயுத போர் குறித்து பேசி வருகின்றனர் எனவும் ரஷ்யா கூறியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலைய பணியில் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈடுப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.