ஹைதராபாத்தை பொளந்து கட்டிய ராஜஸ்தான் - 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது.இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் 55, ஜோஸ் பட்லர் 35, ஹெட்மேயர் 32, தேவ்தத் படிக்கல் 44 ரன்கள் விளாச 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து கடினமான இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 3, ராகுல் திரிபாதி 0, நிக்கோலஸ் பூரன் 0, அபிஷேக் சர்மா 9 ரன்களில் அவுட்டாக ஹைதராபாத் ரன் குவிக்க முடியாமல் திணறியது. அதிகப்பட்சமாக மார்க்ரம் 57 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும் விளாச 20 ஓவர்களில் ஹைதராபாத் அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.