கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார் பிரபல வீரர் - ரசிகர்கள் கண்ணீர் மல்க வாழ்த்து
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரபல நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் ஓய்வுப் பெற்றுள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு ஒரு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
Ross Taylor got emotional during national anthem.#ROSSTAYLOR #NZvNEDpic.twitter.com/NlBmhEtHlZ
— CRICKET UPDATES ? (@AbdullahNeaz) April 4, 2022
அதைத்தொடர்ந்து மார்ச் 29 மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதிகளில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 2–0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து 3வது போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த நியூசிலாந்து 333 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த நெதர்லாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழக்க நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியுடன் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார்.
இதற்கான முடிவை அவர் கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட்டிருந்தார். இதனால் அவரை உற்சாகமாக வழியனுப்ப நியூசிலாந்து நாட்டு ரசிகர்கள் இன்றைய போட்டியின்போது மைதானத்தில் கூடி இருந்தார்கள்.இந்த போட்டியின் ஆரம்பத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட நிலையில் அப்போது நியூசிலாந்தின் தேசிய கீதம் கேட்டு ராஸ் டெய்லர் உணர்ச்சியில் கண்கலங்கினார்.
இதேபோல் கடைசி முறையாக களமிறங்கிய ராஸ் டெய்லருக்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்க நெதர்லாந்து வீரர்கள் அவரின் இரு புறத்திலும் வரிசையாக நின்று கைதட்டி கௌரவமான வரவேற்பை கொடுத்தனர். இப்போட்டியில் ராஸ் டெய்லர் 16 பந்துகளில் ஒரு சிக்சர் உட்பட 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.