சந்திரபாபு நாயுடு கைது....ஆந்திராவில் முழு அடைப்பு...ஸ்தம்பித்த மாநிலம்..!!
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநிலம் முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு கைது
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆந்திராவின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இருந்த போது, திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு நேற்றிரவு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபுவின் பொது வாழ்க்கை, வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுகளை வழங்கவும், மருந்து மாத்திரைகளை அனுமதிக்கவும், சிறையில் தனி அறை ஒதுக்கீடு செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
ஸ்தம்பித்த மாநிலம்
சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு சிறை நிர்வாகம் விசாரணை கைதியின் 7691ஐ ஒதுக்கீடு செய்துள்ளது.இதனையடுத்து இன்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும், பாஜகவும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்த பந்த்தின் காரணமாக ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் கடைகள் போன்றவை மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாததால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகின்றன.
அங்கங்கே தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.. அதனை தொடர்ந்து கட்சி தொண்டர்களும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.