மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறாரா ரோகித் ஷர்மா? - வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி வகித்து வரும் ரோகித் ஷர்மா அப்பதவியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே திக வெற்றிகளை பெற்று, அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து மூன்று முறை தோல்வியை தழுவி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரோகித் ஷர்மா தற்போது இந்திய அணிக்கு அனைத்து பிரிவிலும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளதால் அவருக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நெருக்கடிகள் அதிகம் உள்ள ஐபிஎல் தொடரிலும் அவர் கேப்டனாக தொடர்கிறார். இதனால் விராட் கோலி, தோனி வரிசையில் ரோகித் ஷர்மாவும் கேப்டன் பதவியை விட்டு விலகுவார் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்டது.
பேட்டிங் சொதப்பல் காரணமாக அணிக்குள்ளேயே ரோகித் ஷர்மாவுக்கு நெருக்கடி இருப்பதாக தெரிகிறது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ரோகித் ஷர்மாவின் பேட்டிங் சொதப்பல் தான்.
குறைந்த ரன்களை எடுத்து ரோகித் விரைவில் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறுவதால், அந்த அணிக்கு தொடக்கம் சரி வர அமையவில்லை.
இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில், முதல் ஆட்டத்தில் 41 ரன்களும், இரண்டாவது ஆட்டத்தில் 10 ரன்களும், 3-வது ஆட்டத்தில் 3 ரன்களும் எடுத்து ரோகித் ஷர்மா பேட்டிங்கில் சொதப்பினார்.
கேப்டன் பதவியால் ஏற்படும் சுமை காரணமாக, ரோகித் ஷர்மாவால் முன்பு போல் பேட்டிங்கில் விளையாட முடியவில்லை என்றும் ரோகித் ஷர்மாவுக்கு வயது ஆகி விட்டதால், அவர் கேப்டன் பதவியை இளம் வீரருக்கு கொடுத்துவிட்டு சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோகித்தின் பேட்டிங் பாதிக்கப்படுவதால் அவர் ஒரு சில போட்டியில் ஓய்வு எடுத்து கொண்டு, பின்னர் ஐபிஎல் தொடருக்கு திரும்பவும் வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.