16 கோடிக்கு விலைபோகும் பிரபல வீரர் - வாயைப்பிளக்கும் ரசிகர்கள்
ஐபிஎல் ஏலத்தில் வீரர் ரூ.16 கோடிக்கு ஏலம் போவார் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
அதன்படி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி) ஆகியோரை மட்டும் தக்கவைத்துள்ளது. மற்ற வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷீத் கான் நிச்சயம் 16 கோடிக்கு மேல் ஏலம் போவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
அவரை ஹைதராபாத் அணி இரண்டாவது வீரராக தக்க வைத்து கொள்ள முழு முனைப்பு காட்டியது, ஆனால் ரஷீத் கான் தன்னை முதல் வீரராக (16கோடி) தக்க வைக்க வேண்டும் இல்லையெனில் விலகிகொள்கிறேன் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதன் காரணமாகவே ஹைதராபாத் அணியால் ரஷீத் கானை தக்க வைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.