டாஸ்மார்க் கடையில் கொள்ளை முயற்சி - செருப்பால் சிக்கிக்கொண்ட கொள்ளையர்கள்
உளுந்தூர்பேட்டையில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றவர்கள் செருப்பால் சிக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கீரியம்மன் கோவில் அருகே இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடை தைப்பூசம் காரணமாக நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் காலை பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையை மர்ம நபர்கள் உடைத்து மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செருப்புகளையும் பறிமுதல் செய்தனர். அதேசமயம் உளுந்தூர்பேட்டை உளுந்தூர் காலனியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற கட்டிட தொழிலாளி தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்றும் யாரோ திருடிச் சென்றதாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
டாஸ்மாக் மதுபான கடையின் முன்பாக நின்று இருசக்கர வாகனத்தின் பதிவு எண் ஐயப்பன் கொடுத்த புகாரில் இருந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணும் ஒன்றாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடையின் முன்பாக கிடந்த செருப்புகளை போலீசார் ஐயப்பனிடம் காட்டிய பொழுது அந்த செருப்புகள் உளுந்தூர் காலனியைச் சேர்ந்த பவித்ரன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரின் செருப்புகள் என்று தெரிவித்தார். மேலும் இதற்கு ஆதாரமாக அவர்கள் தங்களது செல்போன்களில் வைத்திருந்த புகைப்படங்களை ஒப்பிட்டு விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் பிடித்த போலீசார் தொடர்ந்து அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது நண்பர் தீனா என்பவரோடு சேர்ந்து மூன்று பேரும் ஐயப்பன் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி டாஸ்மாக் மதுபான கடைகள் தைப்பூசத்தை யொட்டி மூடி இருக்கும் என்பதால் நேற்று செவ்வாய்க்கிழமை தாங்கள் குடிப்பதற்கு போக மீதி இருக்கக்கூடிய மதுபாட்டில்களை விற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் உள்ள 4 பெட்டிகளை மதுபோதையில் எடுத்து வரும்போது அதைத் தூக்க முடியாமல் அதே இடத்தில் போட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் டாஸ்மாக் மதுபான கடையில் இருந்த 5000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் அவர்கள் கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.