ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது: காரணம் என்ன?
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம், அதிமுக ஆட்சியில் அமைக்கப் பட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன் கேள்வி எழுப்பப்பட்டபோது, பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது என்று குறிப்பிட்டார். இதை எதிர்த்து, அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர், மேலும் திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படுவதாக எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால் திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படவில்லை. இதற்கு அம்மா உணவகம் சாட்சி என்று முதல்வர் முக ஸ்டாலின் விளக்கம் அளித்தநிலையில் இன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.