தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற அவசியமில்லை...மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் ஆளுநர்
தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பொது பாடத்திட்டம்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக உயர்கல்வி கவுன்சில் பொது பாடத்திட்டத்தை வகுத்து அளித்திருக்கிறது. அனைத்து பல்கலைக்கழங்கள் இந்த பாடத்திட்ட முறையையே பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் வகுத்துள்ள பின்பற்ற தேவையில்லை என்று பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் கடிதம்
இதுதொடர்பான ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்களும், தன்னாட்சி கலை அறிவியல் முதல்வர்களும் தமிழக அரசின் பொது பாடத்திட்டம் குறித்து கவலை தெரிவித்து வரும் நிலையில், புதிய பொது பாடத்திட்டம் பின்தங்கியது என்றும் கருதப்படும் நிலையில், அதனை பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயர்க்கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்வது மத்திய அரசின் அதிகாரவரம்பிற்குள் உள்ளதை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக மானிய குழுவிடம் இதுதொடர்பாக கேட்கப்பட்டதாகவும் ஆளுநர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழக மானிய குழு தன்னாட்சி அதிகாரம், பொது பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், கல்வி பொது பட்டியலில் இருப்பதால் யுஜிசி விதிகளுக்கு எதிராக மாநில அரசு திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும் பதிவிட்டுள்ளார்.