அந்த காலத்தில் ஜாதி இல்லை பிராமணர் சூத்திரர் போன்ற பிரிவுகள் தான் இருந்தது - ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரமணர்கள் அனைவருக்கும் இலவசமாக கல்வி கொடுத்தனர் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
ஆளுநர் மாளிகை
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு 89 புத்தகங்களை எழுதிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதை தொடர்ந்து புத்தக வெளியீடு நடைபெற்றது.
இதன் பின் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பண்டைய பாரதத்தில் இருந்த பண்பாடும், நாகரீகமும் உலகுக்கே எடுத்துக்காட்டாக இருந்தன. மக்கள் எந்த பாகுபாடும் இன்றி ஒற்றுமையாக இருந்தனர். காரணம் அந்தக் காலத்தில் ஜாதி என்ற முறையே கிடையாது. செய்யும் தொழிலுக்கு ஏற்ப பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன. இவர்களை தவிர முஸ்லிம்கள் இருந்தனர்.
இலவச கல்வி
அப்போது, தொழில் ரீதியான பிரிவுகள் மட்டுமே இருந்தன. அதனால் மக்களிடையே எந்த வேற்றுமையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தனர். யாரும் யாரையும் அடிமைப்படுத்த எண்ணவில்லை. அன்றைக்கு கல்வியிலும், அறிவிலும் உயர்ந்து விளங்கிய பிராமணர்கள், அனைவருக்கும் பாகுபாடின்றி கல்வியை கற்றுத் தந்தனர்.
1800-களில் பிராமணர்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருந்தாலும் கூட கல்வி கற்றுக்கொடுக்க எந்தக் கட்டணமும் வாங்கவில்லை. அன்றைய காலத்திலேயே இலவச கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் நாம் தான். அப்பொழுது கல்வி வணிகமயமாகவில்லை. ஆங்கிலேயர் வந்த பிறகு தான் கல்விமுறை திட்டமிட்டு ஒழிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் தான் ஜாதியை உருவாக்கினார்கள் என்றும் பேசியுள்ளார்.