”எல்லாம் சும்மா டூப்பு” : இங்கிலாந்து வீரரை கடுமையாக விமர்சித்த ரிக்கி பாண்டிங் - என்ன காரணம்?
பென் ஸ்டோக்ஸ் இப்போதெல்லாம் ‘மென்’ ஸ்டோக்ஸ் என்று கூறும் அளவுக்கு மென்மையாகி விட்டார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் கண்ட இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 185 ரன்களும், ஆஸ்திரேலியா 267 ரன்களும் எடுத்தன.
82 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இதனால் இப்போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளத்துக்கு பேட்டியளித்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், எதிரணியினர் இவரைப் பார்த்தாலே பயப்படுவார்கள் என்ற ஒரு தன்மையை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இழந்து விட்டதாகவும், அவர் இப்போதெல்லாம் ‘மென்’ ஸ்டோக்ஸ் என்று கூறும் அளவுக்கு மென்மையாகி விட்டார் எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும் ஸ்டோக்ஸ் என்னவோ ஒரு டீன் எல்கர் போலவும், வெஸ்ட் இண்டீஸின் சுவர் சந்தர்பால் போலவும் ஆட முயற்சிக்கிறார். அது இவருக்கு வராது என்பதுதான் கசப்பான உண்மை. எப்போதும் கிரேட் பவுலர்களை அடித்து ஆடி அவர்களின் லைன் மற்றும் லெந்த்தை காலி செய்யவில்லை எனில் அவர்கள் நம்மை எப்போது வேண்டுமானாலும் காலி செய்து விடுவார்கள் என்பதையும் பென் ஸ்டோக்ஸ் உணர வேண்டும்.
ஆஷஸ் தொடரில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 34 ரன்களையே எடுத்துள்ளார். இன்று மெல்போர்ன் டெஸ்ட்டில் இன்னிங்ஸை தொடரும் பென் ஸ்டோக்ஸ், ரிக்கி பாண்டிங்கின் விமர்சனத்தை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.