தமிழகத்தில் அரிசி விலை அதிரடி உயர்வு: கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரிப்பு! - என்ன காரணம்?
தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவிற்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் நெல் பெரும்பாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, அரவை செய்யப்பட்ட பிறகு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் அரிசி வகைகளில் பெரும்பாலானவை ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
விளைச்சல் குறைவு
இந்நிலையில், கடந்த பருவத்தில் கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்ததால், அங்கிருந்து தமிழகத்திற்கு விற்பனைக்காக வரும் அரிசியின் வரத்து கணிசமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, தமிழகத்தில் சில்லறை சந்தையில் விற்கப்படும் அரிசி வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வரை கர்நாடகா பொன்னி அரிசி கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1050 ரக அரிசி ரூ.40 இலிருந்து ரூ.48 ஆகவும், ஐஆர்-20 ரக அரிசி ரூ.40 இலிருந்து ரூ.45 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும், ‘பாபட்லா’ எனப்படும் நாட்டு பொன்னி அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.60 இலிருந்து ரூ.70 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் அரிசியை பதுக்கி வைக்கும் நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.