ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவதூறாக பேசி விடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சி.எஸ்.கர்ணன்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் நீதிபதி கர்ணன். ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக பேசியதற்காக ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்ப பெண்கள், பெண் வழக்குரைஞர்கள், உயர்நீதிமன்ற பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல விடியோக்களை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி கைது சிறையில் அடைக்கப்பட்டார்.
தனக்கு ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ். கர்ணன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.