கோயில்களில் திருமணம் செய்பவர்களுக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடு
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு சில கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கோயில் திருவிழாக்கள், மதம் சம்பந்தமான கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இது குறித்து இந்து சமய அறநிலைய துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது - கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடனும் பக்தர்கள் நலன் கருதியும் கோயில் நிர்வாகம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுத்துள்ளது. அவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று (ஏப்ரல் 10) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். திருமண விழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. கோயில்களில் உள்ள திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.
ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.