விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்க; அதிமுக போராட்டம் நடத்தும் - எடப்பாடி பழனிசாமி!
விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்யாவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குண்டர் சட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட், செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில், 3,174 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சி காலத்தில் கையகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது. இதற்கிடையே சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் சென்றபோது அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் கடந்த 20 பேர் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இந்நிலையில், செய்யாறு விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எந்தவித முன்வழக்குகளும் இல்லாத நிலையில், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும், குண்டர் சட்டத்தை ரத்துசெய்யாவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.