கள்ளக்குறிச்சி கலவரம் 67 நாட்களுக்கு பின் பள்ளியின் மறுசீரமைப்பு பணிகள் தொடக்கம்
கள்ளக்குறிச்சி கலவரத்தால் சூறையாடப்பட்ட பள்ளி 67 நாட்களுக்கு பிறகு மீண்டும் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
கலவரமாக வெடித்த போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த கலவர சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தன.
இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் பள்ளி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில்,
மறு சீரமைப்பு பணி தொடங்கியது
பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து பள்ளியில் கட்டிட மறுசீரமைப்பு பணிகளை மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் 45 நாட்களுக்கு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் 67 நாட்களுக்குப் பிறகு கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்று மறு சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.