பழைய சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் இல்லை - அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத மைதானங்களில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் ஒன்று. இந்த மைதனம் பல சாதனைகள் வீரர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பல சாதனை போட்டிகளை கண்டுள்ளது. அவ்வளவு ஏன் இந்தியா சர்வதேச டெஸ்ட் போட்டியில் பெற்ற முதல் வெற்றியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
சென்னை மக்களோடு கலந்த இந்த சேப்பாக்கம் மைதானம் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்காக முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாயகமும் சேப்பாக்கம் மைதானம் தான் என்பதால் ரசிகர்களுக்கு எப்போதும் பிடித்தமான இடங்களில் ஒன்றாகவும் மாறிப் போனது.
இதனிடையே லண்டனை சேர்ந்த கட்டுமான நிறுவனம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. அடிலெய்ட் ஓவல் மற்றும் லண்டன் லார்ட்ஸ் மைதான அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச தரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தை பார்க்கும் போது இது சென்னையா இல்லை வெளிநாடா என்று தோன்றும் அளவுக்கு இந்த மைதானம் இருந்தது.
ஆனால் இந்த மைதானத்தில் உள்ள மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டடம் பாரம்பரியமிக்க புரதான சின்னம் என்று அறிவிக்கப்பட்டதால், அதனை இடித்து கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.இது குறித்து பல முறை அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால் 10 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லை.
மேலும் மைதானத்தில் உள்ள ஐ.ஜே.கே. மாடத்திற்கு முறையான அனுமதி இல்லை என்றும், அதனை இடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனால் மூன்று கேலரிகளை பயன்படுத்த முடியாமல் போனதால் பல சர்வதேச போட்டிகள் சென்னையில் நடத்த முடியாமல் போனது.
ஆனால் தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தது. ஐ.ஜே.கே. கேலரிகள் பாதுகாப்பனது என ஏற்கனவே உறுதிபபடுத்தப்பட்டது. தற்போது மெட்ராஸ் கிரிக்கெட் வாரியம் கட்டடத்தையும் இடித்து புதியதாக மாற்ற அனுமதி கிடைத்துள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் பல சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது பழைய கட்டடத்தை இடித்து மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாதத்திற்குள் இந்த பணியை முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. இதனால் புத்தம் புதிய தோற்றத்தில் காணப்படும் மைதானத்தில் இனி சென்னை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.