ஐபிஎல் 2021: மீதி போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதில் என்ன சிக்கல்?
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமானதால் பாதியிலே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடத்தவிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளும் அங்கு தான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது கடினமாகியுள்ளது. ஐபிஎல் 2021-ன் மீதிப் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்களும் பங்கேற்பது கடினம் என்று கூறப்படுகிறது.
அந்த நாடுகளின் தேசிய அணிகள் பங்கேற்றும் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மீதிப் போட்டிகளில் விளையாடாத அயல்நாட்டு வீரர்களுக்கு முழு சம்பளம் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள், ”எந்தப் போட்டியில் ஆடுகிறார்களோ அந்தப் போட்டிக்கான தொகை மட்டுமே முழுதும் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்களுக்கு கிடைக்கும்.
யுஏஇ சுற்றில் ஆடாத வெளிநாட்டு வீரர்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்ய அணி உரிமையாளர்களுக்கு உரிமையுள்ளது.
ஐபிஎல் போட்டித்தொடரின் இடையில் காயமடைந்தால் முழு சம்பளம் கிடைக்கும். பிசிசிஐ முழு சீசன் தொடரையும் நடத்தவில்லை எனும் போதும் வீரர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க வேண்டும். வீரர்கள் தாமாகவே விலகினால் அவர்களுக்கு ஆடிய போட்டியின் அடிப்படையில் சம்பளம் கொடுக்கப்படும்” என்கின்றன.