ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு
பாலமேடு மற்றும் சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16:1.2023) நடைபெற்ற ஜல்விக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த இரா.அரவிந்தராஜ் (வயது 24) த/பெ இராஜேந்திரன் என்பவரும்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த அரவிந்த் (வயது 25) த/பெ மாரிமுத்து எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், “இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.