தாயும், குழந்தையும் பலி - உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை
சத்துவாச்சாரியில் உள்ளசந்தியா கருத்தரிப்பு மையம் மற்றும் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் பிறந்த குழந்தையும் பலி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை.
ராணிப்பேட்டை மாவட்டம் போலிப்பாக்கத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜாவின் மனைவி மகாலட்சுமி கர்பமாக இருந்த நிலையில் அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து ராஜா தனது மனைவி மகாலட்சுமியை உடனடியாக அழைத்து வந்து சந்தியா மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால் அங்கு மகாலட்சுமிக்கு சிகிச்சை அளிக்க ஊசி போடப்பட்டுள்ளது. பின்னர் இரவு மருத்துவமனை ஊழியர்கள் மகாலட்சுமிக்கு பிரசவம் முடிந்து இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் சிறிது நேரம் கழித்து மகாலட்சுமி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இறந்த பெண்ணின் உறவினர் இன்று சந்தியா மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. தவறான சிகிச்சையால் கர்பிணி தாய் மற்றும் குழந்தை பலியானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதே போல சந்தியா மருத்துவமனையில் தவறான சிகிச்சைகளால் பல தாய் சேய் மரணங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.