திமுக மீது பொய் பழி;பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா? அமைச்சர் ரகுபதி கேள்வி
திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள் என அமைச்சர் ரகுபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
ஈசிஆர் கார் சம்பவம்
சென்னை ஈசிஆரில் திமுக கொடி கட்டிய கார் ஒன்று நள்ளிரவில், பெண்கள் பயணித்த காரை துரத்தியதாக பெண்கள் தரப்பில் கானத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமைச்சர் ரகுபதி
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் யாரும் திமுகவை சேர்ந்தவர்கள் இல்லை என்றும், திமுக கொடி இருந்தால் டோல்கேட்டில் பணம் வசூலிக்க மாட்டார்கள் என திமுக கொடியை கட்டியதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சியினர் திமுகவை விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் மகளிர் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் திமுக அரசின் மீது பழி போட முயற்சிப்பதும் சில நாட்களிலேயே உண்மை தெரிய வந்து அந்த முயற்சி தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.
அமைச்சர் ரகுபதி
அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு என்ற முக்கிய குற்றவாளி அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என தனது பின்புலத்தை அவரே ஒப்புக் கொள்ளும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கிறது.
திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்ஸோ குற்றங்கள் என அதிமுகவை சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது ஒவ்வொரு குற்றச் செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.
திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்? வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?" என தெரிவித்துள்ளார்.