தேர்தல் வரை வாட்சப்பில் கூட இதை செய்ய கூடாது - தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
தேர்தல் வரை கடைப்பிடிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய கட்டுப்பாடு
ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்குப்பதிவு முடியும் வரை 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.

தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் (Twitter) போன்ற ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.
குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்புகளுக்கும் இது பொருந்தும்.
பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது.
மேற்கண்ட விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று 21.4.2026 மாலை 6.00 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் ஏப்ரல் 21 மாலை 6 மணிக்குப் பிறகு செல்லாது.
வாக்காளர்களை வேட்பாளர்களின் வாகனத்தில் அழைத்து செல்வதற்கு தடை. வாக்குச்சாவடியில் இருந்து (100 மீட்டர் வெளியே) 2 நபர்களை கொண்ட தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கு மட்டும் அனுமதி.