சிவப்பு பட்டியலில் 33 நாடுகள்! பிரித்தானியா திரும்பும் பயணிகளால் அதிகரிக்கும் சிக்கல்
ஹொட்டலில் 10 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிக்க, பல அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் இருந்தும் பிரித்தானியா திரும்பும் பயணிகளால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா அபாயம் மிகுந்த உலகின் 33 பகுதிகளில் இருந்து பிரித்தானியா திரும்பும் பயணிகள், கட்டாயமாக 10 நாட்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் போரிஸ் அரசு அறிவித்துள்ளது. இதற்கு கட்டணமாக 1,750 பவுண்டுகள் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய இந்த கட்டுப்பாட்டால், பயணிகள் பலர் பிரித்தானியாவுக்குள் படையெடுத்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் அரசு அறிவித்துள்ள அந்த 33 சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து வந்தவர்கள் என கூறப்படுகிறது. அதிக கட்டணம், 10 நாட்கள் ஹொட்டல் தனிமைப்படுத்துதல் என இருப்பதால், அதை தவிர்ப்பதற்காகவே ஒரு நாள் முன்னதாக பலர் பிரித்தானியா திரும்பியுள்ளனர்.
இதனால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, ஹொட்டல் தனிமைப்படுத்துதலும் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைய வாய்ப்புகள் அதிகம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக இந்த ஹொட்டல் தனிமைப்படுத்துதலும் இருந்ததாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
15ம் திகதி முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் ஹொட்டல் தனிமைப்படுத்துதல் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததா அல்லது அதிகரித்ததா என்பது தொடர்பில் இனிவரும் நாட்களில் தெரியவரும் என்கிறார்கள் நிபுணர்கள்.