தமிழகத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
தமிழகத்திற்கு இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நடப்பாண்டில் இயல்பை விட 94 % அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழை மேலும் நீடிக்கும் எனவும் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அத்துடன் தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 4ம் தேதி நாளை நீலகிரி, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக்கனமழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை காரணமாக இந்திய வானிலை மையம் ரைட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.