வெடித்த ஆடியோ விவகாரம் - மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மணிப்பூர் கலவரம்
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரேன் சிங் அம்மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே மெய்தி - குக்கி ஆகிய இரு பிரிவு மக்கள் இடையே இனக் கலவரம் நடைபெற்று வருகிறது.
இன கலவரம்
இனக்கலவரத்தால், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், பிரேன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் முதல்வர் பிரேன் சிங் வன்முறையில் தூண்டும் வகையில் பேசிய ஆடியோவே கலவரத்திற்கு காரணம் என ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய தடயவியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அண்மையில், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி முதல்வர் பிரேன் சிங் அதற்காக மன்னிப்பும் கேட்டார்.
முதல்வர் ராஜினாமா
இந்நிலையில் இன்று(09.02.2025) 2 மணி நேரத்திற்கும் மேலாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்திய முதல்வர் பிரேன் சிங், அதன் பின்னர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ராஜினாமா கடிதத்தை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார்.
பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தில், "இதுவரை மணிப்பூர் மக்களுக்காக சேவை செய்தது மிகப்பெரிய மரியாதை. மணிப்பூர் மக்களின் நலன்களை பாதுகாக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், பல்வேறு திட்டங்களை செல்படுத்தியதற்காக மத்திய அரசுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஆடியோ விவகாரம் பூதாகரமாக வெடித்ததே மணிப்பூர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய காரணம் என கூறப்படுகிறது. அடுத்த முதல்வர் யார் என்பது ஓரிரு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.