சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு இது தான் காரணம் - சோகத்தில் தோனி
ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.
முதல் ஐபிஎல் போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் நேற்று அஹமதாபாத்தில் கோலகலமாக தொடங்கியது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் (92) ரன்களும், மொய்ன் அலி 23 ரன்களும், கடைசி நேரத்தில் தோனி 14* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 178 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணி அபார வெற்றி
குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி,ரசீத் கான் மற்றும் ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு விர்திமான் சஹா 25 ரன்களும், சுப்மன் கில் 63 ரன்களும் எடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சாய் சுதர்சன் 23 ரன்களும்,விஜய் சங்கர் 27 ரன்களும் எடுது்து கொடுத்தன் மூலம் போட்டியின் கடைசி மூன்று ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு குஜராத் அணி வந்தது.
போட்டியின் 19வது ஓவரில் களத்திற்கு வந்த ரசீத் கான் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து குஜராத் அணியின் வெற்றியை எளிதாக்கி கொடுத்ததன் மூலம் 19.2 ஓவரில் இலக்கை இலகுவாக எட்டிய குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோனி வேதனை
இந்தநிலையில், குஜராத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டனான தோனி, பந்துவீச்சாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தோனி பேசுகையில், “பனிப்பொழிவு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பேட்டிங்கிலும் நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.
ருத்துராஜ் கெய்க்வாட் மிக சிறப்பாக விளையாடினார், அவரது தனித்துவமிக்க பேட்டிங்கை வெளியில் இருந்து பார்ப்பதும் ஒரு அழகு தான்.
அவர் தேர்வு செய்யும் ஷாட்களை பாராட்டியே ஆக வேண்டும். இளம் வீரர்கள் தாங்களாக முன்வந்து தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
ஹங்ரேக்கர் தனது வேலையை சரியாக செய்து கொடுத்தார். பந்துவீச்சாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
நோ-பால்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் நோ-பாலை தவிர்ப்பது நமது கையில் தான் உள்ளது.
இரண்டு இடது கை பந்துவீச்சாளர்கள் ஆடும் லெவனில் இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன், இதனால் தான் சிவம் துபேக்கு அணியில் இடம் கிடைத்தது, ஆனால் அவரை விட மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதே சரியானதாக இருக்கும் என எனக்கு பின்பு தோன்றியதால் அவருக்கு பந்துவீசும் வாய்ப்பு கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.