இறுதிவரை மீசை வளர்க்காத நல்லகண்ணு - பின்னணியில் உள்ள சோகக்கதை
மறைந்த நல்லகண்ணு இறுதிவரை மீசை வளர்க்காததன் பின்னணியை இந்த பதிவில் பார்க்கலாம்.
நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவரது விருப்பப்படி, அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு உடல் தானம் கொடுக்கப்பட உள்ளது.
மீசை வளர்க்காததன் காரணம்
1925 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணு, தனது மாணவர் பருவத்திலே இந்திய சுதந்திர போராட்டங்களில் பங்கு கொண்டுள்ளார்.
அவரின் வாசிப்புப் பழக்கத்தை பார்த்த பள்ளி ஆசிரியர் பலவேசம் 'சோவியத் ருஷ்யா' 'கார்ல்மாக்ஸ் வரலாறு' போன்ற நூல்களை வாசிக்கக் கொடுத்திருக்கிறார்.
அதன் தாக்கத்தால், 1643 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 80 ஆண்டுகளாக அதே கட்சியில் பயணித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டில், 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது.
அதில், இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது, அவரது மீசையை காவல்துறையினர் சுருட்டை வைத்துப் பொசுக்கி சித்திரவதை செய்தனர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை.
நல்லகண்ணு கடைசி வரை மீசை வளர்க்காததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
போரட்ட வாழ்க்கை
அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் அன்னசாமி என்கிற கம்யூனிஸ்ட், தனது மகள் ரஞ்சிதத்தை நல்லகண்ணுவிற்கு திருமணம் செய்து கொடுத்தார்.
1996 ஆம்ஆண்டு நடைபெற்ற சாதிக்கலவரத்தில் நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி வெட்டிக்கொல்லப்பட்டார்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது என பேசி சாதியக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டி கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்.
மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியததை எதிர்த்துநல்லகண்ணு, சுமார் 4000 பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார்.
தேர்தலில் தோல்வி
இதே போன்று, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 2018 ஆம் ஆண்டில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் எடுப்பதைத் தடை செய்யக் கோரி நடைபெற்ற வழக்கில், தனியாக இவரே வழக்காடி, மணல் அள்ள தடை பெற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர் தொடங்கி மாநில செயலாளர் வரை பல்வேறு பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நல்லகண்ணு, பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனிடம் (தற்போதைய துணை ஜனாதிபதி) சுமார் 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் பாஜக, திமுக கூட்டணியில் இருந்தது.
ரூ.1 கோடியை திருப்பியளித்த நல்லகண்ணு
2007 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டபோது கொடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் நிதியைக் கட்சியின் வளர்ச்சிக்கும், விவசாய சங்க வளர்ச்சிக்கும் வழங்கினார்.
அவரது 80வது பிறந்தநாளின் போது, கட்சி தொண்டர்களிடம் ரூ.1 கோடி வரை நிதி திரட்டி, ரூ.1 கோடியும் ஒரு காரும் வழங்கியது. அதனை அந்த மேடையிலே கட்சிக்கு திருப்பி வழங்கினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவருக்கு வழங்கப்ட்ட ரூ.10 லட்சம் பணத்துடன் தன்னுடைய ரூ.5,000 முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
சென்னை பெரு வெள்ளத்தின் போது நந்தனம் சிஐடி நகரில் உள்ள அவரது வீடு, வெள்ளத்தால் சூழப்பட்டது.
அப்போது அவரை மீட்க வந்த மீட்பு பணியாளர்களிடம் இந்த பகுதியில் சிலர் கை குழந்தைகளுடன் தவிக்கிறார்கள். அவர்களை எல்லாம் மீட்டு விட்டு கடைசியாக என்னை மீட்க வாருங்கள் என கூறினார்.
நல்லுகண்ணுவை போன்ற எளிமையான அரசியல்வாதிகள் இந்த காலத்தில் இல்லை என மக்கள் அவரை போற்றி வருகின்றனர்.